ரயில்வே கேட் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
சிங்கபெருமாள் கோவில், செப். 5-– சிங்கபெருமாள் கோவில் ரயில்வே கேட் இடையே சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க
சிங்கபெருமாள் கோவில் ரயில்வே கேட் இடையே சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
சிங்கபெருமாள் கோவில் – ஸ்ரீபெரும்புதூர் சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. திருக்கச்சூர்,விஐ.பி.,நகர், தெள்ளிமேடு உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த சாலை வழியாக நகர பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்த சாலையில், சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையம் அருகே ரயில் தண்டவாளம் உள்ளது. இந்த தண்டவாளங்களுக்கு இடையே உள்ள தார் சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ரயில்வே கேட் இடையே உள்ள 100 மீட்டர் சாலை ரயில்வே துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இவ்வழியே உள்ள சாலை சேதமடைந்து இரண்டு ஆண்டுகளாகியும் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால், ரயில் தண்டவாளத்தை கடக்கும் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுவது தொடர்கதையாக உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.