போலீஸ் செய்திகள்
வெடி குண்டு மிரட்டல் விடுத்தவர் கைது தேனி: மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு செப்., 1 இரவு 9:00 மணிக்கு ஓர்
தேனி: மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு செப்., 1 இரவு 9:00 மணிக்கு ஓர் அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் பெரியகுளம் எ.புதுக்கோட்டை ஆரோக்கிமாதா நகரில் வெடிகுண்டு வைத்திருப்பதாக பேசி அழைப்பை துண்டித்தார். இது தொடர்பாக பெரியகுளம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் பொய்யாக தகவல் தெரிவித்து அச்சத்தை ஏற்படுத்திய எ.புதுக்கோட்டை கக்கன்ஜிநகர் ராஜா 40, என்பவரை கைது செய்தனர்.
தேனி: உத்தமபாளையம் புலிகுத்தி தங்கமுத்துநகர் தங்கையா 43, தமிழர் தேசிய பார்வர்டு பிளாக் கட்சி உறுப்பினர். அதே அமைப்பில் பொறுப்பில் உள்ள மாயன், ராகுல் தங்கையாவிடம் பழகினர். அமைப்பின் தலைவர் சென்னை வர கூறுகிறார். அவசர தேவையாக ரூ. 2 லட்சம் பணம், காரை வழங்க கூறினர். இதனை நம்பி தங்கையா பணம், காரை மாயன், ராகுலிடம் வழங்கினார். சில நாட்களுக்கு பின் கார், பணத்தை கேட் போது தரவில்லை. கடந்த ஜூலையில் பஸ் ஸ்டாண்ட் அருகே ராகுல், மாயன் இணைந்து தங்கையாவை கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். தங்கையா புகாரில் தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.
தேனி: தேவதானப்பட்டி செல்லப்பாண்டி 51, பேரூராட்சியில் சுகாதாரப்பிரிவு மேற்பார்வையாளராக உள்ளார். அதே பகுதியை சேர்ந்த பாண்டியனை 15வது வார்டில் பணி செய்ய அனுப்பி இருந்தார். பாண்டியன் பணிக்கு செல்ல வில்லை. அலுவலகத்திற்கு அரிவாளுடன் வந்த பாண்டியனிடம் இதுபற்றி கேட்டார். பாண்டியன் கொலை மிரட்டல் விடுத்தார். செல்லப்பாண்டி புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
தேனி: பெரியகுளம் தென்கரை பட்டாளம்மன் கோயில் தெரு அழகர் 48. இவர் பெரியகுளம்-வடுகபட்டி ரோட்டில் நடந்து சென்றார். அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காயமடைந்து பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். சகோதரி தேவி புகாரில் தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
நாய் குறுக்கே சென்றதால் டூவிலரில் சென்றவர் பலி
தேனி: அம்பாசமுத்திரம் மேற்கு தெரு யுகேஷ் 33. இவர் டூவீலரில் அரண்மனைப்புதுாரில் இருந்து கோட்டைபட்டி வழியாக டூவீலரில் சென்றார். அவ்வழியாக நாய் குறுக்கே சென்றது. இதனால் டூவீலரில் இருந்து கீழே விழுந்த யுகேஷ் காயமடைந்து மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். தந்தை வேலப்பன் புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.