அமெரிக்க டாலருக்கு காத்திருக்கும் ஆப்பு? ட்ரம்பின் மிரட்டலுக்கு நடுவே வெளியான ரகசிய மாஸ்டர் பிளான்

உலக வர்த்தகம் மற்றும் சர்வதேச நிதித்துறையில் அசைக்க முடியாத ஒற்றை அதிகாரமாகத் திகழ்ந்து வரும் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை வீழ்த்துவது குறித்து, பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளிடையே நீண்ட நாட்களாகத் தீவிர விவாதங்கள் நடந்து வருகின்றன. டாலருக்கு மாற்றாகப் பிரிக்ஸ் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு புதிய பொதுவான நாணயத்தை உருவாக்கப் போகிறதா என்ற உலகளாவிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், டெல்லியில் நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இதற்கான அதிரடி மாஸ்டர் பிளான் ஒன்று அரங்கேறியுள்ளது.
உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த இந்த மாநாட்டில், டாலருக்குப் பதிலாகப் புதிய தனி நாணயத்தை உருவாக்கும் அறிவிப்பு எதுவும் முந்தைய மாநாடுகளைப் போலவே இம்முறையும் வெளியாகவில்லை. அதற்குப் பின்னால் ஒரு ராஜதந்திர உத்தி ஒளிந்திருக்கிறது. மாநாட்டுக்கு முன்பாக, "உலக நிதித்துறையில் டாலரின் நிலையைப் பாதிக்கும் எவ்வித முயற்சியையும் பிரிக்ஸ் நாடுகள் மேற்கொள்ளக் கூடாது; மீறினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பே பகிரங்கமாக எச்சரித்திருந்தார். மேலும், டாலருக்கு மாற்றாக வேறு நாணயத்தை உருவாக்குவது இந்தியாவின் கொள்கை கிடையாது என்று இந்தியாவும் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியிருந்தது.
இதனால், மாநாட்டு முடிவில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வக் கூட்டறிக்கையில் அமெரிக்க டாலரையோ அல்லது அமெரிக்காவையோ நேரடியாகக் குறிப்பிட்டு எந்தவொரு சீண்டல்களும் செய்யப்படவில்லை. டாலரை நேரடியாகப் பகைத்துக் கொள்ளாமல், அதே நேரத்தில் அதன் பிடியிலிருந்து தப்பிக்கப் பிரிக்ஸ் தலைவர்கள் ஒரு மாற்றுப் பாதையைக் கையில் எடுத்துள்ளனர். வளர்ந்து வரும் நாடுகளின் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்குத் தங்களின் சொந்த 'நியூ டெவலப்மெண்ட் பேங்க்' மூலமாக நிதி உதவி வழங்குவதை அதிகரிக்க முடிவு செய்துள்ளனர். அதிலும் குறிப்பாக, டாலருக்குப் பதிலாக அந்தந்த உறுப்பு நாடுகளின் உள்ளூர் நாணயங்களிலேயே கடன்களை வழங்குவதை அதிகரிக்க வேண்டும் என்று பிரிக்ஸ் தலைவர்கள் பலமாக வலியுறுத்தியுள்ளனர்.
இந்த உள்ளூர் நாணயக் கடன் திட்டத்திற்குப் பின்னால் ஒரு பெரிய பொருளாதாரப் பாதுகாப்புப் பலன் உள்ளது. உதாரணமாக, இந்தியாவில் ஒரு பெரிய பாலமோ அல்லது சாலையோ கட்டுவதற்கு அமெரிக்க டாலரில் கடன் வாங்கினால், சர்வதேசச் சந்தையில் டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடையும் போது, இந்தியா வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தத் தனது சொந்தப் பணத்தை அதிகமாக வாரி இறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஆனால், அதே கடனை இந்திய ரூபாயிலேயே வாங்கிக் கொண்டால், டாலர் மதிப்பு எகிறினாலும் இந்தியாவிற்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது.
இதன் மூலம் வெளிநாட்டு நாணய மாற்று விகிதத்தால் நாடுகளுக்கு ஏற்படும் பொருளாதார விபரீத அபாயங்களை மொத்தமாகக் குறைக்க முடியும். டாலர் மதிப்பு உயரும் போதெல்லாம் தங்களின் தலை மேல் விழும் கூடுதல் கடன் சுமையைத் தந்திரமாகத் தவிர்ப்பதற்கான இந்த பிரிக்ஸ் நாடுகளின் புதிய நகர்வு, சர்வதேசப் பொருளாதாரக் களத்தில் ஒரு சத்தமில்லாத புரட்சியை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)