பள்ளி முடிந்து திரும்பிய மாணவன் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் பலி
திருப்பத்துார்: திருப்பத்துார் அருகே, பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவன், ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் பலியானார்.
திருப்பத்துார் அடுத்த, கவுண்டப்பனுாரைச் சேர்ந்தவர் நித்திஷ், 14. இவர், கண்ணாலப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்தார். நித்திஷ் மற்றும் அவரது நண்பர்கள் மூவர், நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து, 5:30 மணியளவில் வீட்டிற்கு ஷேர் ஆட்டோவில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது, ஷேர் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் நித்திஷ் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற மூன்று மாணவர்கள் காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்து ஏற்படுத்திய ஆட்டோ டிரைவர் தப்பினார். கந்திலி போலீசார் விசாரித்து வருகின்றனர்.