Politics
ஊழல் செய்த யாரும் தப்பிக்க முடியாது அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி
உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் மூக்கையாத்தேவர் நினைவு தினத்தை முன்னிட்டு,பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லுாரி வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் த.வெ.க., சார்பில் அமைச்சர் நிர்மல்குமார் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் விஜய், தங்கப்பாண்டி, கல்லாணை, ஜெகநாத்மிஸ்ரா, கருப்பையா, சபரிஐங்கரன் உள்ளிட்ட 10 எம்.எல்.ஏ.,க்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது:
மேகமலை விவகாரத்தில் எது உண்மை என்று எடுத்து சொல்லாமல் விட்டு விட்டனர். அந்த வழக்கை நடத்தும் போது எந்த அக்கறையும் காட்டவில்லை. வழக்கு நீதிமன்றத்தில் உள்ள சூழலில் இன்றைய உண்மை நிலையை எடுத்துரைத்து, மக்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கச் செய்வோம்.
உசிலம்பட்டி பஸ்ஸ்டாண்ட் பணி தி.மு.க., நிர்வாகிகளின் காழ்ப்புணர்ச்சியால் முடங்கியது. அதை சரி செய்து வருகிறோம். முன்னாள் அமைச்சர் நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை. பணம் வாங்கிக் கொண்டு வேலைக்கு அமர்த்தியதாக ஆதாரப்பூர்வமான தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வழக்காகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். ஊழல் செய்தால், தவறு செய்திருந்தால், யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது.
ஒரு சில நிகழ்வுகள் குறித்து கம்யூ., கட்சியினர் கருத்துக்களை தெரிவித்து வந்தாலும், மாநில நிர்வாகிகளுடன், பேசி வருகிறோம். அவர்களோடு இணைந்து பணியாற்றுவோம். தமிழக மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ, மக்களுக்கு என்ன தேவையோ அதை நாளை (இன்று) சட்டமன்றத்தில் முதல்வர் பேசுவார் என்றார்.