Crime, law and justice
வடமதுரை வாலிபர் கொலையில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே அஞ்சுக்குழிபட்டியில் நாக மாணிக்கக்கல் விற்ற தகராறில் வாலிபரை கொலை செய்த 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அஞ்சுக்குழிபட்டியைச் சேர்ந்த சந்தானகிருஷ்ணன் 55, டீக்கடை நடத்தி வருகிறார். இவரது நண்பர் நத்தத்தைச் சேர்ந்த தொழிலாளி கருஞ்சாமி 42.
2019ல் இவர் தன்னிடம் அசல் நாக மாணிக்கக்கல் உள்ளது. அதை விற்க விரும்புகிறேன். நல்ல விலைக்கு வாங்குபவர் இருந்தால் தெரியப்படுத்து என சந்தானகிருஷ்ணனிடம் கூறினார்.
அதை பரிசோதித்த சந்தானகிருஷ்ணன் தான் வாங்குவதாக தெரிவித்து ரூ.1.50 லட்சத்தை கொடுத்து கருஞ்சாமிடம் இருந்து கல்லை பெற்றார்.
வீட்டிற்கு சென்று மீண்டும் பரிசோதித்ததில் சிவப்பு நிற பாசி கல்லை கொடுத்து ஏமாற்றியது தெரிந்தது.
இதுகுறித்து கருஞ்சாமியிடம் கேட்டபோது கூடுதலாக ரூ. 1.50 லட்சம் கொடுத்தால் அசல் கல்லை தருவதாக மீண்டும் பேரம் பேசினார். அதற்கும் சம்மதம் தெரிவித்த சந்தானகிருஷ்ணன் பணத்தை ஏற்பாடு செய்வதாக கூறினார்.
பின்னர் கருஞ்சாமி பணத்துடன் மாமரத்துப்பட்டி அருகே அவரது மாமா கரந்தனுடைய தோட்டத்திற்கு வந்து அசல் கல்லை பெற்றுக் கொள்ளுமாறு கூறினார். அதன்படி சந்தானகிருஷ்ணன், அவரது மகன் ஹரிஹரன், ஹரிஹரனின் நண்பர் திண்டுக்கல் என்.எஸ்.,நகர் சிவகுமார் 27, ஆகிய மூவரும் மாமரத்துபட்டி தோட்டத்திற்கு சென்றனர்.
அங்கு நடந்த பேச்சுவார்த்தையில் சந்தானகிருஷ்ணன் தரப்புக்கும் கருஞ்சாமி தரப்புக்கும் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த கருஞ்சாமி, அவரது உறவினர், நண்பர்கள் நத்தம் மற்றும் மாமரத்துப்பட்டியைச் சேர்ந்த சின்னையா 33, கரந்தன் 52, சின்னகுஞ்சு 34, வெள்ளைச்சாமி 61, பால்ராஜ் 33, ஆகியோர் சேர்ந்து சிவக்குமாரை கத்தியால் குத்திக்கொலை செய்தனர். வடமதுரை போலீசார் விசாரித்து கருஞ்சாமி உட்பட 6 பேரையும் கைது செய்தனர்.
இவ்வழக்கு திண்டுக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் சிவச்சந்திரன் ஆஜரானார்.
கருஞ்சாமிக்கு ஆயுள் தண்டனை, ரூ.1500 அபராதமும், சின்னையா, கரந்தன், சின்ன குஞ்சு, வெள்ளைச்சாமி, பால்ராஜ் ஆகிய 5 பேருக்கு ஆயுள் தண்டனை, தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பத்மநாபன் தீர்ப்பளித்தார். ஆறு பேரும் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.
