Arts, culture, entertainment and media
காரைக்குடியில் தமிழாசிரியர் கழக மாநில தேர்தலை புறக்கணித்த ஆசிரியர்கள்
காரைக்குடி: காரைக்குடியில் நடந்த தமிழக தமிழாசிரியர் கழக மாநில தேர்தல் முறையாக நடைபெறவில்லை எனக்கூறி, தமிழக தமிழாசிரியர் கழக உரிமை மீட்புக் குழுவினர் புறக்கணிப்பு செய்தனர்.
காரைக்குடி முத்துப்பட்டினம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் நேற்று தமிழக தமிழாசிரியர் கழக மாநில தேர்தல் நடந்தது. தலைவர், செயலாளர், பொருளாளர் உட்பட 21 பதவிகளுக்கு நேற்று வேட்பு மனு தாக்கல் நடந்தது. இன்று ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இந்நிலையில் தேர்தல் முறையாக நடைபெறாமல் விதி மீறி நடப்பதாக, தமிழக தமிழாசிரியர் கழக உரிமை மீட்பு குழுவினர் புகார் தெரிவித்தனர். மேலும் தேர்தலை நிறுத்தி வைக்க கோரி தேர்தல் கமிஷனர் ராபர்ட்டிடம் மனு அளித்தனர். ஆனால், மாநில நிர்வாகிகளிடம் முன்னதாகவே புகார் அளித்திருக்க வேண்டும். தேர்தல் பணிகள் தொடங்கிய பிறகு மனுவை பெற முடியாது என்று தேர்தல் கமிஷனர் கூறி மறுத்தார். இதனால் காரைக்குடியில் நேற்று கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தும், தமிழக தமிழாசிரியர் கழக உரிமை மீட்பு குழுவினர் தேர்தலை புறக்கணித்து சென்றனர்.
குழு உறுப்பினர் சிவக்குமார் கூறியதாவது, மாநிலத்தில் 25 மாவட்டங்களில் முறையாக மாவட்ட தேர்தலை நடத்தாமல், நியமனம் செய்யப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களை வாக்காளர்களாக கொண்டு தேர்தல் நடத்துவது விதிமீறல் ஆகும். மாநில வரவு செலவு கணக்கு பொது குழுவில் தாக்கல் செய்து ஒப்புதல் பெரும் முன்பே தேர்தல் அறிவிப்பு வெளியிட்டது விதிமீறல். மாநில பொதுக்குழு உறுப்பினர் பட்டியலில் சில மாவட்டங்கள் முழுமையாகவும் சில மாவட்டங்கள் பகுதியாகவும் விடுபட்டு, முழுமை பெறாத உறுப்பினர்களைக் கொண்டு தேர்தல் நடத்தப்படுகிறது. குற்றாலத்தில் நடந்த மாவட்ட விழாவை, மாநில பொது குழுவாக காட்டி தீர்மானங்கள் அறிவிக்காமல் தேர்தல் தேதி, இடம், கமிஷனர் அறிவித்தது விதிமீறல் தான். தமிழ் ஆசிரியர்கள் பொறுப்புக்கு வருவதை தடுத்து, பொறுப்பில் உள்ள தலைமையாசிரியர்களை மீண்டும் பொறுப்புக்கு கொண்டு வரும் வகையில் ஒரே தரப்பிற்கு ஆதரவாக தேர்தல் நடத்தப்படுகிறது. முறையாக தேர்தல் நடத்த வேண்டும் என்று கொடுத்த மனுவை கூட நிராகரித்து விட்டனர்.
இது குறித்து தமிழக தமிழாசிரியர் கழக நிர்வாகிகள் கூறியதாவது, மாநிலத்தில் 38 மாவட்டங்களுக்கு தேர்தல் நடக்கிறது. 5 மாவட்டத்தினர் மட்டுமே பொய்யான வாக்குறுதிகளை கூறி எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். 380 பேர்களை உறுப்பினர்களாக கொண்டு முறையாக தேர்தல் நடக்கிறது என்றனர்.