இலங்கை அகதி உடல் மண்டபத்தில் ஒதுங்கியது: கொலையா என விசாரணை
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே மண்டபம் கடற்கரையில் இலங்கை அகதி உடல் ஒதுங்கிய நிலையில் வெட்டுக்காயம் இருப்பதால் அவர் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.
இலங்கை யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் 46. இவருக்கு மனைவி ஆனந்தி, இரு மகள்கள் உள்ளனர். இவர்கள் 10 ஆண்டுகளுக்கு முன் அகதியாக ராமேஸ்வரம் வந்து திருச்சி முகாமில் தங்கி இருந்தனர். பின் 2022 முதல் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கினர். ஸ்ரீதர் மண்டபம், ராமேஸ்வரம் பகுதியில் பெயின்டிங் வேலை செய்த நிலையில் மது பழக்கத்திற்கு அடிமையானார். இதனால் மது அருந்த அடிக்கடி மனைவி மற்றும் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் சண்டை போடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
நேற்று முன்தினம் இரவு மது அருந்த மனைவியிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். பின் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று காலை மண்டபம் கடற்கரையில் ஸ்ரீதர் உடல் கிடந்தது.
இவரது இடது கன்னத்தில் வெட்டுக் காயம் இருந்ததால் மர்ம நபர்கள் கொலை செய்து கடலில் வீசி இருப்பார்களா அல்லதுவேறு காரணமா என மண்டபம் போலீசார் விசாரிக்கின்றனர்.