Crime, law and justice
ராஜேந்திர பாலாஜி பாஸ்போர்ட்டை திருப்பி தர நீதிமன்றம் உத்தரவு
ஸ்ரீவில்லிபுத்துார்: அ.தி.மு.க. ஆட்சியின் போது ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த இரு வழக்குகளில், பறிமுதல் செய்யப்பட்ட அவரது பாஸ்போர்ட்டை திரும்ப கொடுக்கவும், நீதிமன்ற முன் அனுமதி இன்றி இந்தியாவை விட்டு வெளியேறக் கூடாது என நிபந்தனை விதித்தும் ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்துாரை சேர்ந்த ரவீந்திரனின் சகோதரி மகனுக்கு ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 30 லட்சம் வாங்கி விட்டு ஏமாற்றியதாக 2021ல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ரவீந்திரன் புகார் அளித்தார். இதனை விசாரித்த போலீசார் விஜய நல்ல தம்பி, ராஜேந்திர பாலாஜி உட்பட 8பேர் மீது ஒரு வழக்கும், ராஜேந்திர பாலாஜி பணம் வாங்கிக்கொண்டு தன்னை ஏமாற்றியதாக விஜய நல்ல தம்பி அளித்த புகாரில் ராஜேந்திர பாலாஜி உட்பட 7 பேர் மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்து ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது.
இந்நிலையில் தன்னிடம் பறிமுதல் செய்யப்பட்ட பாஸ்போர்ட்டை திரும்ப தரக்கோரி ராஜேந்திர பாலாஜி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதனை விசாரித்த முதன்மை மாவட்ட நீதிபதி கந்தகுமார், பாஸ்போர்ட்டை ராஜேந்திர பாலாஜியிடம் திருப்பிக் கொடுக்கவும், இந் நீதிமன்றத்தின் முன் அனுமதி இன்றி அவர் இந்தியாவை விட்டு வெளியேறக்கூடாது என நிபந்தனை விதித்தும் உத்தரவிட்டார்.