Politics
MP தொகுதி மேம்பாட்டு நிதி: அதிகாரிகளுக்கு கங்கனா ரனாவத் சரமாரி கேள்வி; வைரலாகும் வீடியோ
கங்கனா ரனாவத், தொகுதி மேம்பாட்டு நிதி சரியாகப் பயன்படுத்தப்படாதது குறித்து வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் கடுமையாகக் கேள்வி எழுப்பியிருக்கிறார். |MP Constituency Development Fund: Kangana Ranaut grills officials with a barrage of questions

"எனது தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சுமார் ரூ.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" - கங்கனா ரனாவத்
இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மக்களவைத் தொகுதிக்கான மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் நேற்று (செப்.5) நடைபெற்றது.
இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய தொகுதி எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரனாவத், தொகுதி மேம்பாட்டு நிதி சரியாகப் பயன்படுத்தப்படாதது குறித்து வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் கடுமையாகக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இக்கூட்டத்தில் பேசிய கங்கனா ரனாவத், "எனது தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சுமார் ரூ.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் 90 சதவீத நிதியைச் செலவிட்டுவிட்டதாக அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர். ஆனால், கள நிலவரப்படி வெறும் ரூ.50 லட்சம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகளின் கணக்கு அறிக்கைகளுக்கும் உண்மையான செலவினங்களுக்கும் பெரிய அளவில் முரண்பாடு உள்ளது.
இதற்கு துறை சார்ந்த அதிகாரிகள் முறையான விளக்கம் அளித்தாக வேண்டும். மேலும், இந்த நிதியில் 30 முதல் 40 சதவீதம் வரை முறைகேடு செய்த நபர்களுக்குச் சென்றடைந்துள்ளதாகச் சில புலனாய்வு அமைப்புகள் கண்டறிந்துள்ளன.
அந்தப் பணத்தைக் கூட அதிகாரிகளால் மீட்க முடியவில்லை. மண்டி தொகுதியில் வளர்ச்சிப் பணிகள் முடங்கிக் கிடப்பது குறித்து தேசிய ஊடகங்கள் என்னை விமர்சித்து வருகின்றன.
நிறைவேற்றப்படாத திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தினமும் சமூக வலைத்தளங்களில் வீடியோக்களைப் பதிவிட்டு கேள்வி கேட்கின்றனர்.
இனிமேலும் தாமதிக்காமல் நிலுவையில் உள்ள அனைத்துத் திட்டப் பணிகளையும் விரைந்து முடிப்பதுடன், மக்கள் பணத்தை நேர்மையாகப் பயன்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று எச்சரித்திருக்கிறார்.
