Economy, business and finance
தென் மாவட்டங்களில் அதிக தொழில் பூங்காக்கள் தயார் நிலை; தொழிற்கூடம் அமைக்க முன்னுரிமை

சென்னை: புதிய தொழில் பூங்காக்கள் அமைக்கப்படுவதில் திருநெல்வேலி மற்றும் துாத்துக்குடி மாவட்டங்களுக்கு அரசு முக்கியத்துவம் அளிக்கவுள்ளது. அங்கு முதலீடு செய்யும் நிறுவனங்கள் விரைவாக தொழில் தொடங்க, 'பிளக் அண்டு பிளே' எனப்படும் தயார் நிலை தொழிற்கூடங்கள் அமைக்கப்பட உள்ளன.
சென்னை அருகில் உள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில், 20 தொழில் பூங்காக்களை, 'சிப்காட்' எனப்படும் தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனம் அமைத்துள்ளது.
அவற்றில் மோட்டார் வாகனம், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த நிறுவனங்கள் உற்பத்தி ஆலைகளை அமைத்துள்ளன. இதனால், பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளன.
தென் மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பை அதிகரிக்க திருநெல்வேலி, துாத்துக்குடியில் தொழில் பூங்காக்களை அரசு அமைக்க உள்ளது.
துாத்துக்குடி மாவட்டத்தில் துாத்துக்குடி, சில்லாநத்தம், வைப்பாரில் ஐந்து தொழில் பூங்காக்களும், திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டானில் இரு தொழில் பூங்காக்களும் உள்ளன. துாத்துக்குடியில், 12 தொழில் பூங்காக்களும், திருநெல்வேலியில் மூன்று புதிய தொழில் பூங்காக்களும் அமைக்கப்பட உள்ளன.
துாத்துக்குடி முடிவைத்தானேந்தலில், 2,570 ஏக்கர், சில்லாநத்தம் விரிவாக்கம், 1,293 ஏக்கர், உமரிக்கோட்டையில், 1,060 ஏக்கரில் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளன.
அவற்றில் முதலீடு செய்யும் நிறுவனங்கள் விரைவாக தொழில் தொடங்க தயார் நிலை தொழிற்கூடங்கள் அமைக்கப்பட உள்ளன.