ரூ.21 லட்சத்தில் மின்சார வாகனங்கள்: ஆரோவில்லுக்கு என்.எல்.சி., வழங்கல்

வானுார்: என்.எல்.சி., நிறுவனம் மூலம், ஆரோவில்லுக்கு 21 லட்சம் ரூபாய் மதிப்பிலான 4 மின்சார வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் பகுதியில் அன்னையின் கனவு திட்டங்களை நிறைவேற்றும் விதமாக பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து வருகிறது. நாளுக்கு நாள் ஆரோவில் பகுதிக்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
பார்வையாளர்கள் சிரமமின்றி விசிட்டர் சென்டரில் இருந்து மாத்ரி மந்திர் பகுதிக்குச் செல்ல போக்குவரத்து வசதியை மேம்படுத்த அறக்கட்டளை செயலாளர் ஜெயந்தி ரவி நடவடிக்கை எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக என்.எல்.சி., நிறுவனத்தின் மூலம் சி.எஸ்.ஆர்., நிதியுதவியோடு, 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நான்கு புதிய மின்சார வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. இதன் துவக்க விழா நேற்று ஆரோவில் அறக்கட்டளை அலுவலகம் எதிரே நடந்தது.
விழாவில் குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலர், அறக்கட்டளை செயலாளர் ஜெயந்தி ரவி, புதிய மின்சார வாகன போக்குவரத்து திட்டத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், புதுச்சேரி எம்.பி., செல்வகணபதி, என்.எல்.சி. நிறுவனத்தின் இயக்குநர் சுரேஷ் சந்திர சுமன், சாக்கர் அமைப்பின் இயக்குநர் ஆனந்தரெட்டி, புதுச்சேரி ஸ்ரீ அரவிந்தர் ஆசிரம பிரநிதிகள், ஆரோவில் பணிக்குழு, ஏ.டி.டி.சி., உறுப்பினர்கள் பங்கேற்றனர்.