Environment
காட்டு யானைகளுக்குள் மோதல் ‘பாகுபலி’க்கு வாலில் காயம்
மேட்டுப்பாளையம்: காட்டு யானைகளுக்கு இடையே நடைபெற்ற மோதலில் ‘பாகுபலி’ யானைக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த நான்காண்டுகளுக்கும் மேலாக ‘பாகுபலி’ என அழைக்கப்படும் ஒற்றை காட்டு யானை ஒன்று சுற்றி வருகிறது. பிற யானை கூட்டங்களுடன் சேராமலும், அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்லாமலும் பாகுபலி தனி ஒருவனாக சுற்றி திரிகிறது.
பாகுபலி யானை யாரையும் விரட்டவோ, தாக்கவோ இதுவரை முற்பட்டதில்லை என்ற நிலையில், சில நாட்களுக்கு முன்பு பிற யானைகளுடன் நடந்த மோதலில் இதன் வால் பகுதியில் குத்தப்பட்டு, காயம் ஏற்பட்டுள்ளது.
பாகுபலிக்கு ஏற்பட்டுள்ள காயம் அப்பகுதி மக்களிடையே அனுதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
வனத்துறையினர் கூறுகையில், பாகுபலி யானையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். வால் பகுதியில் உள்ள காயம், பிற யானையுடன் சண்டையிட்டு அதனால் ஏற்பட்டதாக இருக்க வாய்ப்பு உள்ளது. விரைவில் அதற்குச் சிகிச்சை அளிக்கப்படும், என்றனர்.---

