Crime, law and justice
பிற ஆண்களுடன் பேசுகிறார்: சென்னையில் இருந்து காதலியை வரவழைத்து ஹோட்டல் அறையில் குத்திக்கொன்ற காதலன்
A young man has been arrested in Assam for summoning his girlfriend from Chennai, booking a hotel room, and stabbing her to death with a pair of scissors.

காதலியை சென்னையில் இருந்து வரவழைத்து அசாமில் ஹோட்டலில் அறை எடுத்து கத்திரிக்கோலால் குத்திக்கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
அசாம் மாநிலம் உடல்புரி மாவட்டத்தைச் சேர்ந்த அபிஜித் கிண்டோ, குரியா என்ற பெண்ணைக் காதலித்து வந்தார். குரியா சென்னையில் தங்கி இருந்தார். குரியா சென்னையிலிருந்து வேறு இரண்டு பெண்களுடன் அசாமில் உள்ள கம்ரூப் அருகில் உள்ள ரங்கியா ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்ததார்.
அவர்களை ரயில் நிலையத்தில் வரவேற்க கிண்டோ சென்றிருந்தார். அவர்களை வரவேற்று அங்குள்ள ஓட்டல் ஒன்றில் தங்கவைத்தார். தானும் அதே ஹோட்டலில் ஒரு அறை எடுத்து தனியாகத் தங்கினார். குரியா தனி அறையில் தங்கி இருந்தார்.
நள்ளிரவு அபிஜித் கிண்டோ, குரியா தங்கி இருந்த அறைக்கு மெதுவாகச் சென்றார். அங்கு அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் ஏற்கனவே தன்னுடன் எடுத்து சென்று இருந்த இரண்டு கத்திரிக்கோலால் குரியாவைச் சரமாறியாக கிண்டோ குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த குரியா சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.
காலையில் பக்கத்து அறையில் தங்கி இருந்த குரியாவின் தோழிகளைத் தொடர்பு கொண்டு உங்களது தோழியைக் கொலை செய்துவிட்டேன் என்று தெரிவித்தார். அதோடு தன்னை தானே தற்கொலை செய்துகொள்ளவும் முயற்சி செய்தார். இது குறித்து கிண்டோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,''அவள் எனக்கு துரோகம் செய்துகொண்டிருந்தாள். மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருந்தாள். அவள் சென்னையில் இருந்து வருவதற்கு முன்பே நான் கொலை செய்ய திட்டமிட்டிருந்தேன்," என்று கூறிய அவர், கத்தரிக்கோலால் அந்தப் பெண்ணைக் கொன்றதை ஒப்புக்கொண்டார்.
இருப்பினும், தற்கொலைக்கு முயன்றது குறித்து அவர் எதுவும் கூறவில்லை. இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து கிண்டோவை கைது செய்தனர். அவரது உடலில் காயங்கள் இருந்ததால் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். கிண்டோ கத்தரிக்கோல் மற்றும் டெஸ்டரைப் பயன்படுத்தி குரியாவைத் தாக்கியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். கூடுதல் பரிசோதனைகள் மற்றும் தடயங்களைச் சேகரிப்பதற்காக கவுகாத்தியிலிருந்து தடயவியல் நிபுணர்கள் குழு ஒன்று அந்த ஹோட்டலுக்கு வந்தது.
