விதி மீறிய பிளக்ஸ் பேனர்கள் தாராளம்: விபத்துகள் நடந்தால் யார் பொறுப்பு?

உடுமலை: உடுமலை நகரில், பிரதான ரோடுகளில், அரசு, நீதிமன்ற உத்தரவுகளை மீறி, பிளக்ஸ் பேனர்கள் அதிகளவு வைக்கப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் விபத்துகள் அதிகரித்து வருகிறது.
உடுமலை நகரில், பிரதான ரோடுகளான, பழநி ரோடு, பொள்ளாச்சி ரோடு, தாராபுரம் ரோடு, தளி ரோடு, திருப்பூர் ரோடு, ராஜேந்திரா ரோடு மற்றும் தளி ரோடு சந்திப்பு, பஸ் ஸ்டாண்ட், அனுஷம் ரோடு சந்திப்பு என அனைத்து இடங்களிலும், பிரமாண்ட பிளக்ஸ் அமைக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களில், பிளக்ஸ் பேனர்கள் வைக்கக்கூடாது என, அரசு மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகள் உள்ள நிலையிலும், விதிமீறி, அமைக்கப்படும் பிளக்ஸ் பேனர்களால், கவன சிதறல், விபத்துகள் ஏற்படுகிறது.
பெரும்பாலான பகுதிகளில், பஸ் ஸ்டாண்ட், பஸ் ஸ்டாப் மற்றும் ரோடுகளை மறைத்து வைத்துள்ளதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கின்றனர். பல இடங்களில் காற்றுக்கு தாங்காமல், வாகன ஓட்டுநர்கள் மீது விழுந்து விபத்துக்களையும் ஏற்படுத்துகிறது.
அதே போல், மடத்துக்குளம் நால்ரோடு, பஸ் ஸ்டாண்ட், கழுகரை உள்ளிட்ட பகுதிகளிலும், பெதப்பம்பட்டி, குடிமங்கலம் நான்கு ரோடு சந்திப்புகள், பஸ் ஸ்டாப் பகுதிகளிலும் ஏராளமான பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
எனவே, விதிமீறி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்றவும், அவற்றை வைத்தவர்கள் மீதும், நகராட்சி, ஒன்றிய அதிகாரிகள் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.