அஜ்ஜூர் நில பிரச்னைக்கு அரசு தீர்வு காணுமா...? ஊட்டி எம்.எல்.ஏ.,வை சந்தித்த கிராம மக்கள்
கோர்த்தகிரி: கோத்தகிரி அருகே, 200 ஆண்டுகளாக மக்கள் வசித்து வரும் அஜ்ஜூர் கிராம நிலப்பிரச்னைக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஊட்டி ஊராட்சி ஒன்றியம், கக்குச்சி ஊராட்சிக்கு உட்பட்ட, அஜ்ஜூர் கிராமத்தில், 200 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் வசித்து வருகின்றனர். கிராம மக்களுக்கு, மின் இணைப்புடன், ஊராட்சி சார்பில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தவிர, 180 குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. 'எஞ்சிய மக்களுக்கு, படிப்படியாக பட்டா வழங்கப்படும்,' என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கட்டபெட்டு வனச்சரகம் சார்பில், 'வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி, விவசாயம் செய்து வரும் மக்களை அங்கிருந்து வெளியேற வேண்டும்,' என, நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காண வலியுறுத்தி, சமீபத்தில் ஊட்டிக்கு வந்திருந்த வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமாரை சந்தித்து கிராம நிவாகிகள் மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த பிரச்னை தொடர்பாக, ஊட்டி தொகுதி எம்.எல்.ஏ., போஜராஜன், சட்டசபையில் குரல் கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து, ஊட்டி தொகுதி எம்.எல்.ஏ.,வை சந்தித்த அஜ்ஜூர் கிராம பாதுகாப்பு குழு தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் மக்கள் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.
எம்.எல்.ஏ., போஜராஜன் கூறுகையில்,'' அஜ்ஜூர் மற்றும் தெங்குமரஹாடா பகுதிகளின் பிரச்னைக்கு தீர்வு காண, மாநில முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.