Lifestyle and human interest
அ.தி.மு.க. ஆட்சியில் வேலைக்கு சேர்த்த 325 பேரையும் குப்பை அள்ள அனுப்புங்க தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல்
கோவை: கோவை மாநகராட்சி அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு, கமிஷனரிடம் கொடுத்த மனு:
அ.தி.மு.க. ஆட்சியில் மாநகராட்சியில் காலியாக இருந்த 550 நிரந்தர துப்புரவு ஊழியர் வேலைக்கு முதல்கட்டமாக 325 பேர் நியமிக்கப்பட்டனர். இதர சமுதாயத்தினரும் சேர்க்கப்பட்டனர். அவர்கள் ஒரு நாள் கூட துப்புரவு பணி செய்யவில்லை. அரசியல் பலத்தில் வந்ததால் அலுவலக பணிக்கும், சுகாதார ஆய்வாளர்களின் மறைமுக ஆதாயப் பணிக்கும் பயன்படுத்துகின்றனர்.
ஜாதி அடிப்படையில் வேலை கொடுக்கும் முறையை கைவிட வேண்டும்; துப்புரவு பணிக்கு செல்லாதவர்களை விடுவிக்க கோரினோம். முந்தைய கமிஷனர் பிறப்பித்த சுற்றறிக்கைபடி, அவர்களுக்கு துப்புரவு பணி ஒதுக்கப்பட்டது.
ஆனாலும் இதுவரை அந்த உத்தரவை செயல்படுத்தாமல் மாநகராட்சி உள்நோக்கத்துடன் செயல்படுகிறது. அவர்களை துாய்மை பணிக்கு அனுப்பாவிட்டால் போராட்டம் நடத்துவோம்; கோர்ட்டில் வழக்கும் போடுவோம்.
2007 முதல் 2012 வரை துப்புரவு பணியில் சேர்ந்த பட்டதாரிகளையும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களையும் இளநிலை உதவியாளர்களாக நியமிக்க வேண்டும். அதற்கு பதிலாக, 2016க்கு பின் அ.தி.மு.க. ஆட்சியில் நியமித்த 325 பேரில் இருந்து தேர்வு செய்ய இருப்பதாக தகவல் வருகிறது; இதை கைவிட வேண்டும்.
சீனியாரிட்டியில் மாற்றுப்பணியாக சுகாதார மேற்பார்வையாளராக பணிபுரிவோரை இளநிலை உதவியாளராக நியமிக்க வேண்டும். இதர படிப்பு படிக்க 3 ஆண்டு அவகாசம் தர வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.