சர்வதேச மாணவர்களுக்கு ஆஸி.,யில் புதிய கட்டுப்பாடு
கான்பரா, செப்.18– அமெரிக்காவை போலவே, ஆஸ்திரேலியாவிலும் அதிகரித்து வரும் குடியேற்றத்தை கட்டுப்படுத்த,
அமெரிக்காவை போலவே, ஆஸ்திரேலியாவிலும் அதிகரித்து வரும் குடியேற்றத்தை கட்டுப்படுத்த, சர்வதேச மாணவர்களுக்கு கடுமையான விதிகளை அந்நாடு அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் மக்கள் தொகை திடீரென அதிகரித்துள்ளதால் அங்கு வீடுகள் பற்றாக்குறை, தினசரி செலவு அதிகரிப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் பொதுப் போக்குவரத்து போன்ற அத்தியாவசிய சேவைகள் மீது கூடுதல் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. அங்கு 12 மாதங்களில் மட்டும் மக்கள் தொகை 1.4 சதவீதம் உயர்ந்து, 2.79 கோடியை எட்டியுள்ளது. இதில் வெளிநாட்டில் இருந்து குடியேறியோர் மட்டும் 2.92 லட்சம்.
நாட்டில் அதிகரித்து வரும் மக்கள்தொகை மற்றும் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தி, 2028ம் ஆண்டுக்குள் நிகர வெளிநாட்டு குடியேற்றத்தை 2.25 லட்சமாக குறைக்க அந்நாட்டு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன் காரணமாக, ‘சர்வதேச மாணவர்கள் இனி தங்கள் குடும்பத்தினரை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து வர அனுமதி இல்லை’ என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று படிப்பை முடித்த பின், அங்கேயே தொடர்ந்து தங்குவதற்காக, அதே தரத்தில் அல்லது தரம் குறைந்த மற்றொரு பாடப்பிரிவில் சேர்க்கை பெறும், ‘விசா ஹாப்பிங்’ முறைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பட்டப்படிப்பை முடித்த பிறகு முதுகலை படிப்பு போன்ற உயர் தகுதிக்குச் செல்ல விரும்புவோருக்கு விசா நீட்டிப்புக்கு அனுமதி உண்டு.