Politics
2029ம் ஆண்டுக்குள் யமுனை நதி தூய்மைப்படுத்தப்படும்; அமித் ஷா உறுதி

புதுடில்லி: வரும் 2029ம் ஆண்டுக்குள் யமுனை நதி தூய்மைப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளார்.
கிஷாவ் பன்நோக்குத் திட்டம் தொடர்பாக, உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, ஹிமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங், ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் ஷர்மா, டில்லி முதல்வர் ரேகா குப்தா, ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர் அமித் ஷா பேசியதாவது; முந்தைய அரசின் ஆட்சியில் யமுனை நதி நீர் பங்கீட்டில், பெரும் தவறு நடந்துள்ளது. நதியில் உள்ள அனைத்து நீரும் மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டதால், யமுனையில் நீரில்லாத சூழல் உருவானது. ஆனால், தற்போதைய கிஷாவ் பன்நோக்கு திட்டத்தின் மூலம், 25 சதவீத தண்ணீர் கிடைக்கும். இது டில்லிக்கும், யமுனைக்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் மிகவும் பயனளிக்கும்.
2029ம் ஆண்டுக்குள் யமுனை நதியைத் தூய்மைப்படுத்தும் இலக்கை அடைய வேண்டும். பிரயாக்ராஜில் யமுனை கங்கையுடன் இணைவதால், யமுனை தூய்மையடைந்தால் மட்டுமே கங்கையைத் தூய்மைப்படுத்தும் கனவு நிறைவேறும், எனக் கூறினார்.
கிஷாவ் பன்நோக்குத் திட்டத்தின் மூலம் உத்தரகண்ட் மற்றும் ஹிமாச்சலப் பிரதேச எல்லையில் பாயும் டோன்ஸ் நதியின் மீது 232.6 மீட்டர் உயரமான கான்கிரீட் ஈர்ப்பு அணை அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் 5 டிஎம்சி நீர் சேமிக்கப்படுவதுடன், 97,000 ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறும். அதுமட்டுமில்லாமல், 1,476 மில்லியன் யூனிட் நீர்மின்சாரம் உற்பத்தியாகும். இதில் டில்லிக்கு மிகப்பெரிய பலன் கிடைக்கும்.