தேசிய போட்டிக்கு தகுதி பெற்ற கே.எஸ்.சி. பள்ளி மாணவர்கள்
திருப்பூர்: மாநில அளவிலான குடியரசு தின மற்றும் பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகளில், திருப்பூர் கே.எஸ்.சி. அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில், கடந்த 3, 4 ஆகிய தேதிகளில் மாநில அளவிலான ஜூடோ போட்டிகள் நடைபெற்றன. இதில், திருப்பூர் கே.எஸ்.சி., அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த, 11 மாணவர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில், மாணவர் ஹரிஹரன், தங்கப்பதக்கம், முகமது இத்ரீஸ், வெள்ளிப் பதக்கம், பிரவீன் வெண்கல பதக்கம் வென்றனர்.
இதில், மாணவர் பிரவீன், தொடர்ந்து, 4-வது ஆண்டாக மாநிலப் போட்டியில் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தங்கப்பதக்கம் வென்ற ஹரிஹரன், இந்திய பள்ளிகள் விளையாட்டு சம்மேளனம் நடத்தும் தேசிய அளவிலான ஜூடோ போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.
இதுதவிர, நாமக்கல்லில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில், 2 மாணவர்கள், தேனியில் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டியில் ஒரு மாணவர்; சிலம்ப போட்டியில், 3 மாணவர்கள் மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில், 8 மாணவர்கள் என நடப்புக் கல்வியாண்டில் மட்டும், இப்பள்ளியைச் சேர்ந்த, 25 மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வாகியுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியை (பொறுப்பு) பொன்செல்வி, உதவி தலைமையாசிரியர்கள் பிரகாசம், வசந்தாமணி, நாகேஸ்வரி மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் புஷ்பவதி, ஆனந்தன் ஆகியோர் வாழ்த்தினர்.