60 நிமிடங்கள்... இடைவிடாத சாதனை - தேனியில் 44 குழந்தைகள் செய்த சம்பவம்

தேனி மாவட்டத்தில் உலக அமைதியை வலியுறுத்தி ஆதரவற்றோர் காப்பகத்தைச் சேர்ந்த 44 குழந்தைகள் உலக சாதனை படைத்துள்ளனர்.
oதேனி மாவட்டத்தில் உலக அமைதியை வலியுறுத்தி ஆதரவற்றோர் காப்பகத்தைச் சேர்ந்த 44 குழந்தைகள் உலக சாதனை படைத்துள்ளனர். 60 நிமிடங்களில் 224 வகையான யோகாசனங்கள், 10 விதமான கராத்தே செய்முறைகள் மற்றும் 14 வகையான சிலம்பக் கலைகளை இடைவிடாது செய்து இந்தக் குழந்தைகள் அசத்தினர்.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் அருகே உள்ள கோடாங்கிபட்டியில் இயங்கி வரும் மனிதநேய காப்பகத்தில் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர். இந்தக் காப்பகத்தைச் சேர்ந்த 44 குழந்தைகள் உலக அமைதியை வலியுறுத்தி இன்று யோகாசனம், கராத்தே மற்றும் சிலம்பம் ஆகிய மூன்று கலைகளையும் இடைவிடாது செய்து உலக சாதனை நிகழ்த்தினர்.
பொதுவாக யோகா பயில்பவர்கள் கராத்தே மற்றும் சிலம்பம் கற்பது கடினம் என்றும், கராத்தே கற்பவர்கள் யோகாசனம் செய்வது கடினம் என்றும் கூறப்படும் நிலையில், இந்த 44 குழந்தைகள் மூன்று கலைகளையும் ஒரே நேரத்தில் செய்து சாதனை படைத்துள்ளனர். முதல் 20 நிமிடங்களில் 224 வகையான யோகாசனங்களையும், அடுத்த 20 நிமிடங்களில் பஞ்ச், கிக், சியாய் ஸ்டோன் கட் போன்ற 10 விதமான கராத்தே செய்முறைகளையும் செய்தனர்.
இறுதி 20 நிமிடங்களில் அடி வரிசை, கிடா முட்டு, தீப்பந்தம் போன்ற 14 வகையான சிலம்பக் கலைகளை இடைவிடாது செய்து அசத்தினர். குழந்தைகளின் இந்தத் திறமையை ALL INDIA WORLD BOOK OF RECORD மற்றும் HIGH RANGE BOOK OF WORLD RECORD நடுவர்கள் அங்கீகரித்தனர். உலக சாதனைக்கான சான்றிதழை வழங்கி குழந்தைகளைப் பாராட்டினர்.
