Politics
தி.மு.க., நடத்திய குதிரை பேரம் குறித்து விசாரணை நடத்தப்படும்: அமைச்சர் ஆதவ்
சென்னை: ''சட்டசபை தேர்தலுக்கு பின், குதிரை பேரம் நடந்தது குறித்து விசாரணை நடத்தப்படும், அதில், பல உண்மைகள் வெளியாகும்,'' என, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
முஸ்லிம் லீக் - பக்ருதீன் பாஷா: திருவண்ணாமலையில், எங்கள் கட்சி பொதுக்குழு கூட்டத்தில், நான் பேசியதை சிலர் திரித்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
சட்டசபை தேர்தலுக்கு பின், அ.தி.மு.க., ஆட்சியமைக்க, தி.மு.க., ஆதரவு அளிக்க முடிவு செய்ததாக, எங்கள் கட்சிக்கு தெரிவிக்கப்பட்டது.
அதை ஏற்காமல் தான், த.வெ,க., அரசுக்கு ஆதரவு அளிக்க, எங்கள் கட்சி முடிவு செய்தது. இது குறித்து, எங்கள் பொதுச்செயலர் பேசியதை தான், அங்கு குறிப்பிட்டேன்.
முஸ்லிம் லீக் - அமைச்சர் ஷாஜகான்: கடந்த மே 7ல், புதிய அரசு அமைப்பது தொடர்பாக, தி.மு.க., தரப்பில் எங்களிடம் சில முடிவுகள் தெரிவிக்கப்பட்டன.
எங்கள் கட்சியை சேர்ந்த, 2 எம்.எல்.ஏ.,க்களை, கடந்த மே 8 இரவு அழைத்து சென்று, தனியார் ஹேட்டலில் அடைத்து வைத்தனர். அப்போது யார் காவல் காத்தனர்; யார் என்ன பேசினர் என்பதை உடைத்து பேசினால், யாரும் இங்கு அரசியல் செய்ய முடியாது.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி வெளியில் சென்று, அளித்த பேட்டியில், முஸ்லிம் லீக் கட்சியினரை தொடர்புபடுத்தி, குதிரை பேரம் நடந்ததாக பேசியுள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியானதும், கேரளாவில் காங்., கூட்டணி ஆட்சி அமைத்தது. அதில், முஸ்லிம் லீக் இருந்தது.
அதே நேரத்தில், தமிழகத்தில் த.வெ.க., ஆட்சி அமைக்க, காங்., ஆதரவு அளித்ததன் தொடர்ச்சியாக, முஸ்லிம் லீக்கும் ஆதரவு அளித்தது. எந்த சூழ்நிலையிலும், முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.,க்களுடன், தனிப்பட்ட முறையில், த.வெ.க., எதையும் பேசவில்லை.
ஆனால், முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.,க்களை, சென்னை தி.நகரில், உள்ள தி.மு.க., - எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான ஹோட்டலில் யார் அடைத்து வைத்தது என்பது குறித்தும், தி.மு.க., தான் குதிரை பேரத்தில் ஈடுபட்டது என்பதும் விசாரணையில் தெளிவாக தெரியவரும். பல உண்மைகள் வெளியாகும்.
அ.தி.மு.க., - அக்ரி கிருஷ்ணமூர்த்தி: தேர்தலில், எங்கள் கட்சி 47 இடங்களில் வென்றதும், எதிர்க்கட்சியாக செயல்பட நாங்கள் முடிவு செய்தோம். யார் ஆதரவுடனும் ஆட்சி அமைக்க முயற்சிக்கவில்லை.
தி.மு.க., ஆதரவில், அ.தி.மு.க., ஆட்சி அமைக்க முயன்றதாக, சிலர் பொய் பிரசாரம் செய்கின்றனர். 'தி.மு.க., தீயசக்தி' என தொடர்ந்து சொல்லி வருகிறோம். எக்காலத்திலும், தி.மு.க., ஆதரவை நாங்கள் பெற வாய்ப்பு இல்லை.
இவ்வாறு விவாதம் நடந்தது.
