Politics
மூதாட்டியை கொலை செய்து நகைகள் கொள்ளை கடலுாரில் நள்ளிரவில் பயங்கரம்
கடலுார்:கடலுாரில் வீட்டின் முன் படுத்திருந்த மூதாட்டியை அடித்து கொலை செய்து, நகைகளை கொள்ளை அடித்து சென்ற சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலையை சேர்ந்தவர் முத்து மனைவி கலா,60; கணவரை இழந்த இவர், பிழைப்பை தேடி 20 ஆண்டிற்கு முன் கடலுாருக்கு வந்தவர், பஸ் நிலையம் அருகே பாடலி நகரில் கூரை வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டுவிட்டு காற்றுக்காக வீட்டின் வெளியில் படுத்து துாங்கினார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை, கலா ரத்த காயங்களுடன் இறந்து கிடந்ததை கண்டு திடுக்கிட்ட அப்பகுதி மக்கள், திருப்பாதிரிப்புலியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர். கலாவின் காது மற்றும் மூக்கு அறுக்கப்பட்டிருந்தது. தோடு மற்றும் மூக்குத்தி கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து தடயவியல் நிபுணர்களை வரவழைத்து சம்பவ இடத்தில் இருந்த தடயங்களை சேகரித்தனர். பின்னர், கலா உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து, நகைக்காக கலா கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.