Crime, law and justice
பாலியல் வன்கொடுமை வழக்கு: தெஹல்கா நிறுவனர் தேஜ்பால் கோவா கோர்ட்டில் சரண்

கோவா: முன்னாள் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், 'தெஹல்கா' பத்திரிகை நிறுவனர் தருண் தேஜ்பால்(62), மும்பை உயர் நீதிமன்ற கோவா கிளையில் சரணடைந்தார்.
'தெஹல்கா' பத்திரிகை புலனாய்வு செய்து, செய்திகளை வெளியிட்டதில் நாடு முழுதும் பிரபலமடைந்தது. கடந்த 2013ல், இந்த பத்திரிகையின் ஆண்டு விழா யூனியன் பிரதேசமான கோவாவில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் நடந்தது. அப்போது, 'லிப்ட்'டுக்குள் வைத்து, தன் மகள் வயது உள்ள இளம் பெண் பத்திரிகையாளரை, 'தெஹல்கா' நிறுவனர் தருண் தேஜ்பால், பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இந்த குற்றச்சாட்டில் ஆறு மாதங்கள் சிறைவாசம் அனுபவித்த தருண் தேஜ்பாலுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
இதையடுத்து, 2017 முதல் விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற நிலையில், 2021ல் அவர் விடுதலை செய்யப்பட்டார். இதை எதிர்த்து, கோவா அரசு சார்பில் மும்பை உயர் நீதிமன்ற கோவா கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற கிளை பல்வேறு பிரிவுகளின் கீழ் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஐந்து லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து கடந்த ஆகஸ்ட்டில் தீர்ப்பளித்தது.
மேலும், பாலியல் துன்புறுத்தல், இளம் பெண்ணின் உடையை களைய முற்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழும் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதனால், தருண் தேஜ்பால் ஏக காலத்தில் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.
விசாரணையின்போது, 62 வயது நிரம்பிவிட்டதால் கருணை காட்ட வேண்டும் என தருண் தேஜ்பால் தரப்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஏதுவாக, தண்டனையை 8 வாரங்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிமன்றம், அடுத்த இரு வாரங்களுக்குள் கோவா போலீசாரிடம் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டது. பின்னர், வழக்கறிஞரின் வேண்டுகோளை ஏற்று அந்த கால அவகாசம் நான்கு வாரங்களாக அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில், சரணடைய கால அவகாசம் முடிந்ததையடுத்து, மும்பை உயர் நீதிமன்ற கோவா கிளையில், தருண் தேஜ்பால் இன்று சரணடைந்தார்.