அரூரிலுள்ள சுகாதாரமற்ற இறைச்சிகடைகளால் துர்நாற்றம்
அரூர்:தர்மபுரி மாவட்டம், அரூர் நகராட்சிக்கு உட்பட்ட, செக்காம்பட்டிக்கு செல்லும் சாலை மற்றும் வர்ணதீர்த்தத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
அங்குள்ள தெருவில், சுகாதாரமற்ற நிலையில் கசாப்பு கடைகள் செயல்பட்டு வருகின்றன. இறைச்சி எடுக்கப்பட்ட நிலையில், மாட்டின் எலும்பு, கொம்புகள், தோல் ஆகியவை வெட்டவெளியிலேயே கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிந்து, சண்டையிட்டு சாலையில் நுழைகிறது. இதனால், வாகன ஓட்டி கள் விபத்தில் சிக்குகின்றனர். இறைச்சி கழிவால் துர்நாற்றம் வீசுவதால், அப்பகுதிவாசிகள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.அதேபோல், வர்ணீஸ்வரர் கோவில் எதிரில், செயல்படும் இறைச்சி கடைகளில் இருந்து ஆடு, கோழி ஆகியவற்றின் கழிவுகள், அங்குள்ள ராஜகால்வாயில் கொட்டப்படுவதால், பக்தர்கள் துர்நாற்றம் தாங்க முடியாமல், மூக்கை பொத்திக்கொண்டு செல்லும் பரிதாபம் உள்ளது. எனவே, சுகாதார கேடு ஏற்படும் வகையில், நடந்து கொள்ளும் இறைச்சி கடைக்காரர்கள் மீது, அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.