கேரளாவுக்கு 25 டன் யூரியா கடத்தல் குண்டர் சட்டத்தில் வியாபாரி கைது
கோவை: கோவை மாவட்டம், பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள், பாலக்காடு ரோடு, மதுக்கரை சோதனைச்சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்ட போது, 25 டன் யூரியா உர மூட்டை இருந்தது.
விசாரித்த போது, மத்திய அரசால் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்படும் பாரத் யூரியா உர மூட்டைகளை விருத்தாச்சலத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்தியது தெரிந்தது.
கடத்தல் தொடர்பாக பண்ருட்டி மணிகண்டன், எர்ணாகுளம் முகமது பாசில், பூங்காவனம், உரவியாபாரி கணேசமூர்த்தி, இவரது சகோதரர் செந்தில்குமரன் கைது செய்யப்பட்டனர். மத்திய அரசின் திட்டத்தை பாழ்படுத்தும் வகையில், மானியவிலை உர மூட்டைகளை அதிக விலைக்கு விற்கும் கணேசமூர்த்தியை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, கலெக்டருக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதன்படி அவர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.