சென்டர் மீடியனில் செடிகள் குறைப்பு
திருப்புவனம்:மதுரை - பரமக்குடி நான்கு வழி சாலையில் விபத்துக்களை தடுக்க சென்டர் மீடியனில் உள்ள அரளிச்செடிகளின் வரிசைகளை குறைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது.
மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழி சாலை அமைக்கப்பட்டு வாகன போக்குவரத்து நடந்து வருகிறது. 4 வழிச்சாலை நடுவே ஒரு மீட்டர் முதல் மூன்று மீட்டர் அகலம் வரை சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளன. அதில் சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் பொருட்டு அரளி செடி இரண்டு வரிசைகளாக வளர்க்கப்பட்டுள்ளன. நான்கு வழிச்சாலையில் குறுகிய வளைவுகளில் அடிக்கடி விபத்து நேரிட்டு உயிரிழப்பு ஏற்பட்டு வருகின்றன. விபத்துகளுக்கு சென்டர் மீடியனில் அடர்த்தியாக வளர்க்கப்பட்டுள்ள அரளி செடிகளே காரணம் என கூறப்படுகிறது.
எதிரே வரும் வாகனங்கள் சரிவர தெரியவில்லை என வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே அடிக்கடி விபத்து நடக்கும் இடங்களில் சென்டர் மீடியனில் இரண்டு வரிசைகளாக உள்ள அரளிச்செடிகளை அகற்றிவிட்டு நடுவில் ஒரே வரிசையாக செடிகள் வளர்க்கப்பட உள்ளன. இதற்காக இயந்திரங்கள் மூலம் வில்லியரேந்தல், மாரநாடு பாலம் ஆகிய இடங்களில் சென்டர் மீடியனில் உள்ள அரளி செடிகள் அகற்றப்பட்டு வருகின்றன. புதிதாக மண் நிரப்பி ஒரே வரிசையில் செடிகள் இனி வளர்க்கப்பட உள்ளன.