Politics
மஹா., பணியாளர் தேர்வுமுறையை மறுஆய்வு செய்ய உயர்மட்டக் குழு
மும்பை: பணியாளர் தேர்வுமுறையை முழுதுமாக மறுஆய்வு செய்யவும், அதனை மேலும் வெளிப்படையானதாகவும், பாதுகாப்பானதாகவும், தேர்வர்களுக்கு உகந்ததாக மாற்றுவதற்கான நடைமுறைகளை பரிந்துரைக்கவும் உயர்மட்ட குழுவை மஹாராஷ்டிரா அரசு அமைத்துள்ளது.
மஹாராஷ்டிராவில் பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., – சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, அரசுப் பணியாளர் தேர்வு முறையில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததை அடுத்து, அதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், பணியாளர் தேர்வு முறையை முழுதுமாக மறுஆய்வு செய்ய உயர்மட்ட குழுவை மாநில அரசு அமைத்துள்ளது. கடந்த மாதம் 12ல், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் நடந்த கூட்டத்தில் உயர்மட்ட குழு அமைப்பது தொடர்பாக முடிவு எட்டப்பட்டது. உயர் மட்ட குழு குறித்து அரசு தரப்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பொது நிர்வாகத் துறையின் கூடுதல் தலைமைச் செயலர் ராதா, ஏழு பேர் அடங்கிய இந்த குழுவுக்கு தலைமை தாங்குவார். பல்வேறு மாநில அரசு துறைகள், அதிகார அமைப்புகள் மற்றும் தேர்வு நடத்தும் முகமைகள் பின்பற்றும் பணியாளர் தேர்வு முறைகள் மற்றும் நடைமுறைகளை மறுஆய்வு செய்யும் பணி இந்த குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வினாத்தாள் கசிவு, ரகசியத்தன்மை மீறல், ஆள்மாறாட்டம், முறைகேடான கூட்டு சதி மற்றும் தடை செய்யப்பட்ட மின்னணு சாதனங்களின் பயன்பாடு ஆகியவற்றை தடுக்கவும், கண்டறியவும் கூடிய வழிமுறைகளை உயர்மட்ட குழு ஆய்வு செய்யும். தேர்வர்களின் குறைகளை திறம்பட தீர்ப்பதற்கும், அவர்களுடன் சுமுகமான தகவல் தொடர்பை பேணுவதற்கும் மற்றும் நம்பிக்கையை வலுப்படுத்துவதற்குமான நடவடிக்கைகளை இந்த குழு பரிந்துரைக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.