Arts, culture, entertainment and media
Divya Spandana: "எனக்கு அப்படிப்பட்ட ஒரு நபர் இதுவரை அமையவில்லை!" - திருமணம் பற்றி திவ்யா ஸ்பந்தனா
'பொல்லாதவன்' பட நடிகை திவ்யா தனது திருமணம் வாழ்க்கை குறித்து பேசியுள்ளார். | Divya speaks candidly about marriage, relationships.

சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திருமணம் குறித்த தனது கருத்துகளை பகிர்ந்திருக்கிறார் திவ்யா ஸ்பந்தனா.
'பொல்லாதவன்' திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் நடிகையாக பிரபலமாகி, 'வாரணம் ஆயிரம்' உள்ளிட்ட படங்களில் நடித்துத் தமிழ் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்தவர் நடிகை திவ்யா ஸ்பந்தனா.
சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திருமணம் குறித்த தனது கருத்துகளை அவர் பகிர்ந்திருக்கிறார்.
திவ்யா ஸ்பந்தனா பேசுகையில், "திருமணம் செய்துகொள்வது என்பது ஒருவரின் வாழ்க்கையில் அவ்வளவு முக்கியமான விஷயமா என்று கேட்டால், நிச்சயம் இல்லை என்றுதான் சொல்வேன்.
திருமணம் என்பது நான் யார் என்பதைத் தீர்மானிக்கும் காரணியாக இருக்க முடியாது. திருமணம் ஆகாமலேயே நாம் சந்தோஷமாகத்தானே இருக்கிறோம். மகிழ்ச்சியாக இருப்பதுதானே எல்லாவற்றையும் விட ரொம்ப முக்கியம்.
நமக்கு எது வேண்டுமோ அதை நாம்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். மனிதர்களாகிய நமக்குத் தொடர்ந்து மாற்றங்கள் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.
ஒருவேளை சிக்கலே அங்குதான் தொடங்குகிறது என நினைக்கிறேன். நீங்கள் நல்ல நண்பர்களாக இருந்து, ஒரே மாதிரியான எண்ணத்தைப் பகிர்ந்துகொண்டால், திருமணம் செய்துகொள்வது நல்ல யோசனையாகத் தோன்றும்.
திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கும் மனிதர்கள் அனைவரும் நான் சொல்வதை நிச்சயம் ஒப்புக்கொள்வார்கள் என்றே நினைக்கிறேன். ஆனால், எனக்கு அப்படிப்பட்ட ஒரு நபர் இதுவரை அமையவில்லை.
இப்போது நான் அதைக் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்தவும் இல்லை. நான் எனது வேலையில் மிகவும் பரபரப்பாக இருக்கிறேன். ஏனெனில், ஒரு உறவைப் பேணுவதற்கு நேரமும் அர்ப்பணிப்பும் தேவை" எனக் கூறியிருக்கிறார்.

