Health
“பெண்களுக்கு எதிராக தவெகவினர்… முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்

பிரேமலதா விஜயகாந்த், "சமூக வலைதளங்களில் பெண்களுக்கு எதிராக தவெகவினர் பேசுகின்றனர், முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
தேமுதிக எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த், “சமூக வலைதளங்களில் பெண்களுக்கு எதிராக தவெகவினரும் பேசுகிறார்கள். முதலமைச்சர் விஜய் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என சட்டப்பேரவையில் பேசினார். இதற்கு, “திமுகவினர், தவெகவினர் பெயரில் FAKE ஐடி உருவாக்கி விமர்சிக்கின்றனர்” என அமைச்சர் நிர்மல்குமார் பதில் கொடுத்தார்.
எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் சட்டப்பேரவையில் பேசியதாவது; “முதலமைச்சர் அறிவித்த அறிவிப்புகளில் பெண்கள் குறித்து யாரும் தவறாக பேசக்கூடாது அப்படி பேசினால் நடவடிக்கை எடுக்கும் என கூறி உள்ளார். அதனை பெண் எம்.எல்.ஏ., ஒரு பெண்ணாக நான் வரவேற்கிறேன்.
பெண்கள் குறித்து சமூக வலைதள பக்கத்தில் தவெகவினரும் தவறாக பேசி வருகிறார்கள். ஊர் காவல்படையினர் இன்று காவல்துறையில் புதிய அறிவிப்புகள் வரும் என மிக பெரிய எதிர்பார்ப்புகளில் இருந்தனர். காவலர்களுக்கு ஒரு நல்ல செய்தியை முதலமைச்சர் இன்று மாலைக்குள் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
நெல் கொள்முதல் நிலையங்களில் பல லட்சம் டன் நெல்கள் மழையில் நனைந்து வீணாகிறது. அதனை இந்த அரசு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பேசினார்.
இதனைத் தொடர்ந்து தேமுதிக எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்தின் கருத்துக்கு பதில் அளித்த அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், “எங்கள் கட்சியினர் உட்பட அனைவருக்குமே அதனை முதலமைச்சர் கூறியுள்ளார். பெண்கள் குறித்து யார் பேசினாலும் தயவு தாட்சண்யம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும். திமுகவினர் தவெகவினர் பெயரில் FAKE ஐடி உருவாக்கி விமர்சிக்கின்றனர்.
தொடர்ந்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் உறுப்பினர் கூறியது போல யாராவது செய்திருந்தால் அவர்களை கட்சியை விட்டு நீக்கி விடுவதாக குறிப்பிட்டார்.
