Politics
ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ரூ. 6.56 லட்சம் அபராதம்
ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேருக்கு ரூ.6.56 லட்சம் அபராதம் விதித்து அந்நாட்டு நீதிமன்றம் விடுதலை செய்தது.
ஜூலை 22ல் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் ஒரு படகில் இருந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர்.
வாய்தா நாளான நேற்று மீனவர்களை மன்னார் நீதிமன்றத்தில் அந்நாட்டு போலீசார் ஆஜர்படுத்தினர். நீதிபதி எட்டு மீனவர்களுக்கு தலா ரூ.72 ஆயிரம் (இந்திய மதிப்பில்) அபராதமும், மற்றொரு மீனவர் செந்தில் 2வது தடவையாக கைதாகியதால் அவருக்கு மட்டும் ரூ. 80 ஆயிரம் அபராதம் என ரூ. 6.56 லட்சம் விதித்தது.
இந்த அபராதத்தை செலுத்தாவிடில் மீனவர்களை தொடர்ந்து சிறையில் அடைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அபராதத் தொகையை செலுத்த ராமேஸ்வரத்தில் உள்ள மீனவர்களின் உறவினர்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.