Politics
‘தலைமுறையை செதுக்குபவர்கள் ஆசிரியர்கள்’
மேட்டுப்பாளையம்: ‘ஒரு தலைமுறையைச் செதுக்கும் தலையாய பணி செய்பவர்கள் ஆசிரியர்கள்’ என, சச்சிதானந்த பள்ளி செயலாளர் கவிதாசன் பேசினார்.
மேட்டுப்பாளையம் அடுத்த கல்லாறில் உள்ள சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில், ஆசிரியர் தின விழா நடைபெற்றது. விழா அரங்கில் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் திருவுருவப் படத்திற்கு ஆசிரியர்கள்,மாணவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். விழாவுக்கு பள்ளியின் செயலாளர் கவிதாசன் தலைமை வகித்து பேசியதாவது:
ஆசிரியர் தினத்தை நாம் அனைவரும், பெருமையோடு கொண்டாட வேண்டிய ஒரு நன்னாள். டாக்டர்கள், இன்ஜினியர்கள் என பிற பணிகளுக்கு செல்லாமல், அதிக பணம் ஈட்டுவதையும் பொருட்படுத்தாமல், ஒரு தலைமுறையை செதுக்கும், தலையாயப் பணியை தங்களின் விருப்பமாக தேர்ந்தெடுத்துள்ள ஆசிரியர்களை, நாம் மனதார பாராட்ட வேண்டும். எதையும் கைமாறு கருதாமல், அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும் என்று, சுவாமி சச்சிதானந்தரின் கூற்றை, ஆசிரியர்கள் தினமும் நிறைவேற்றி வருகின்றனர்.
பள்ளி என்பது வெறும் கல்வி கற்கும் இடம் மட்டுமல்ல. சகோதரத்துவத்தைப் பயிலும் ஒரு பெருங்குடும்பம். முதல் முறை செய்யும் தவறுகள் கற்றலின் ஒரு பகுதியே. அதை திருத்திக் கொண்டு வளர வேண்டுமே தவிர, மீண்டும் அதே தவறைச் செய்யக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் பதினொன்றாம் வகுப்பு மாணவி காவ்யா ஸ்ரீ வரவேற்றார். மாணவர் சரண் ஞானசேகர் நன்றி கூறினார். பள்ளி முதல்வர் உமா மகேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேல் ஆகியோர் பேசினர். விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செய்திருந்தனர்.