சேலம் அரசு பள்ளியில் தொல்லியல் கண்காட்சி... 1,000 மேற்பட்ட மாணவ, மாணவியர் பார்வையிட்டனர்

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள செட்டிமாங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் தொல்லியல் கண்காட்சி நடைபெற்றது.
சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள செட்டிமாங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் தொல்லியல் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியில் பழங்கால நாணயங்கள், ஓலைச்சுவடிகள், கற்கால கருவிகள் உள்ளிட்ட பல்வேறு தொல்லியல் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்த கண்காட்சியை ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
செட்டிமாங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தொல்லியல் கண்காட்சிக்கு தலைமை ஆசிரியர் தமிழ்தென்றல் தலைமை வகித்தார். மேச்சேரி அருகே மாதநாயக்கன்பட்டி பள்ளி ஆசிரியர் விஜயகுமார் மற்றும் ஆசிரியை அன்பரசி ஆகியோர் இந்த கண்காட்சியை நடத்தினர். பள்ளி நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
இக்கண்காட்சியில் 3ஆம் நூற்றாண்டு பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட தொன்மையான நாணயங்கள் முதல் பல்வேறு காலகட்ட மன்னர்களின் நாணயங்கள் வரை இடம்பெற்றிருந்தன. புழக்கத்தில் உள்ள மற்றும் புழக்கத்தில் இல்லாத பல்வேறு வகை நாணயங்கள், இந்திய அரசால் வெளியிடப்பட்ட 25, 50, 100, 125, 150, 175, 200, 500, 550, 1,000 ரூபாய் நாணயங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
