கரசங்காலில் ரயில் மோதி இளம்பெண் பரிதாப பலி
அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கம் அருகே கரசங்கால் கிராமத்தில், தண்டவாளத்தை கடக்க முயன்ற சத்யா, 26, என்ற இளம்பெண் மீது ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அச்சிறுபாக்கம் அடுத்த கரசங்கால் கிராமத்தைச் சேர்ந்த நீலகண்டன் மனைவி சத்யா, 26. இவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. விவசாய கூலி வேலை செய்து வாழ்ந்து வருகின்றனர்.
நேற்று காலை 8:30 மணியளவில், சென்னை எழும்பூரில் இருந்து விழுப்புரம் மார்க்கமாக புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில் சென்ற போது, ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற சத்யா மீது ரயில் மோதியது. இதில், சத்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து, செங்கல்பட்டு ரயில்வே போலீசாருக்கு, ரயில்வே ஊழியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த செங்கல்பட்டு ரயில்வே போலீசார், உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.