போதை பொருள் கடத்தல் வழக்கு காஞ்சி பெண்ணிற்கு 10 ஆண்டு சிறை
சென்னை: இலங்கைக்கு போதை பொருள் கடத்த முயன்ற காஞ்சிபுரம் பெண்ணிற்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், நல்லுார் சோமங்கலத்தைச் சேர்ந்தவர் தனலட்சுமி, 41. இவர், 2021 டிச., 9ம் தேதி அதிகாலை 1:10 மணி விமானத்தில், இலங்கை நாட்டின் தலைநகர் கொழும்புவிற்கு போதைப் பொருட்கள் கடத்திச் செல்ல இருந்தார். இது குறித்து விமான நிலைய சுங்க துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து தனலட்சுமியிடம், அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, உடலுக்குள் இரு பொட்டலங்களில் 99 கிராம் ‘மெத் ஆம்பெட்டமைன் ஹைட்ரோகுளோரைடு’ என்ற வீரியம் அதிகமுள்ள போதைப் பொருள் இருப்பதும் உறுதிச் செய்யப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், தனலட்சுமியை கைது செய்தனர்.
இந்த வழக்கு, சென்னை போதை பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற முதன்மை நீதிபதி டி.மலர்வலண்டினா முன் விசாரணைக்கு வந்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘‘தனலட்சுமி மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, அவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராதத்தை செலுத்த தவறினால், கூடுதலாக ஓராண்டு சிறையில் இருக்க வேண்டும்,’’ என, உத்தரவிட்டார்.